Published : 11 Nov 2022 07:24 AM
Last Updated : 11 Nov 2022 07:24 AM

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை: குடும்பத்துடன் இணைத்து வைத்த மருத்துவர்கள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சையளித்து, செங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவரை குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளனர். இளைஞர், அவரது பெற்றோருடன் மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி.

செங்கல்பட்டு: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சையளித்து, செங்கைஅரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவரை குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், கடந்த 1-ம் தேதி, 23 வயதுடைய இளைஞர் காலில் காயமுற்று, நடக்க இயலாமல் தனக்குத்தானே பேசிக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துள்ளார். தான் என்ற நினைவு, செங்கல்பட்டுக்கு எப்படி வந்தோம் என்றுதெரியாத நிலையில் இருந்த அவரை, மருத்துவமனை ஊழியர்கள் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவருக்கு மனநல பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவரை மனநல பிரிவில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை ஆரம்பித்த நிலையில், 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சற்று முன்னேற்றம் அடைந்த இளைஞர், தான் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பிறகு நன்றாக குணமடைந்த இளைஞர், தனது தந்தை பெயர் மற்றும் அவருடைய கைபேசி எண்களை தெரிவித்த நிலையில். அவரின் பெற்றோரை தொடர்பு கொண்ட செங்கல்பட்டு மருத்துவமனை நிர்வாகம் அவர்களை செங்கல்பட்டு மருத்துவமனை மனநல பிரிவுக்கு வரவழைத்துள்ளனர். கடந்த 22 நாட்களாக இளைஞர் காணவில்லை என்று தேடிஅலைந்த அவரது தந்தை, தாத்தா ஆகியோர் அனைவருக்கும் நன்றிதெரிவித்தனர். இதைத் தொடர்ந்துபுதிய ஆடைகளை வாங்கி கொடுத்து மருத்துவக் கல்லூரிமுதல்வர் நாராயணசாமி, மனநலத்துறை பேராசிரியர், அவரை பராமரித்த பணியாளர்கள், இளைஞரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x