Published : 10 Nov 2022 04:11 AM
Last Updated : 10 Nov 2022 04:11 AM

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ. 11, 12-ல் மிக கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பல மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில், வரும் 11, 12-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 3 நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் கடற்கரையை நோக்கி நகரக் கூடும். எனினும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 10-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 11-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், கன மழமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 12-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x