Published : 09 Nov 2022 11:22 AM
Last Updated : 09 Nov 2022 11:22 AM

தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; பெண் வாக்காளர்கள் அதிகம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 

வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: "தமிழகத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து,95 ஆயிரத்து 103 பேர், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 758 பேர் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்" என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னையில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இரண்டு பிரதிகள் வழங்க இருக்கிறோம். இது மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

நவ.9 முதல் டிச.8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களிடம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, மாநிலத்தில் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் மொத்த வாக்காளர்கள். இதில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து,95 ஆயிரத்து 103 பேர், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7 ஆயிரத்து 758 பேர் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 17.69 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நவ.9 முதல் டிச.8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.12, நவ.13, நவ.26 மற்றும் நவ.27 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம் 6-பி மூலம் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலில் தமிழகம் சிறப்பாக உள்ளது. பல மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்காளர் பட்டியல்களில் தங்களது பெயர்களை சேர்த்துள்ளனர். இதுவரை 56.09 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x