Published : 09 Nov 2022 04:16 AM
Last Updated : 09 Nov 2022 04:16 AM

தமிழகம் - கேரள மாநில கூட்டு ஆலோசனைக்குப் பிறகே எல்லை மறு நில அளவை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: தமிழக கேரள எல்லையில் மறு நில அளவைப் பணியானது, கூட்டு ஆலோசனைக்குழு கூட்டத்துக்கு பின்னரே மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக, கேரள எல்லைப்பகுதி மாவட்டங்களில் கேரள அரசு எல்லையை வரையறுக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மறு நில அளவைப் பணிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கேரள மாநில அதிகாரி கடிதம்: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா கடந்த நவ. 1-ம் தேதி மின்னணு முறையில் மறு நில அளவைப் பணியை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கேரள மாநில தொடுபுழா மறு நில அளவை உதவி இயக்குநர், கடந்த செப்.12-ம் தேதி தேனி மாவட்ட உதவி இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மறு நில அளவை மேற்கொள்ள உள்ள பகுதிகளுள் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில், தேனி மாவட்ட எல்லையைப் பகிரும் கேரள மாநிலம், உடும்பன் சோழா வட்டம், சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தன் பாறை ஆகிய கிராமங்களை முதல் கட்டமாக மறு நில அளவை செய்யவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இரு மாநில எல்லைகளை நவீன நில அளவை செய்வதற்கான கூட்டத்தில், பங்கேற்க உரிய தேதியை தெரிவிக்க தேனி மாவட்ட உதவி இயக்குநருக்கு கடிதம் வந்தது. தேனி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நாள் மற்றும் நேரம் தெரிவிக்கப்படும்.

இந்நிலையில் தமிழக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் கேரள அரசு மறு நில அளவைப்பணி தொடங்கும் முன், இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன் கூட்டு ஆலோசனைக்குழு கூட்டம் தமிழக கேரள எல்லைகளைச் சேர்ந்த நில அளவை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படும். அதன்பின்னரே மூலஆவணங்களை அனுசரித்து மாநில எல்லையில் கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x