Last Updated : 07 Nov, 2022 06:36 AM

 

Published : 07 Nov 2022 06:36 AM
Last Updated : 07 Nov 2022 06:36 AM

விதிமீறிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கை பொது விதிகளை உருவாக்கியது அரசு: நோட்டீஸ் அளிக்காமல் பார்வையிட அதிகாரிகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொதுவான விதிகளைஉருவாக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அந்தந்த பகுதியை பொருத்தும், சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தும், கட்டிடங்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையில், தமிழக அரசு விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பொதுவான விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வீட்டு வசதி துறை செயலர்ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானாவெளியிட்ட அரசாணை: தமிழக வீட்டுவசதி துறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிகள், தமிழ்நாடு நகர மற்றும் ஊரமைப்பு (அங்கீகரிக்கப்படாத மேம்பாடு நீக்கம்) விதிகள் என்று அழைக்கப்படும். இதன்படி, ஒரு திட்டக் குழுமம் அல்லது அந்த குழுமத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவர், ஒரு நிலம் அல்லது கட்டிடத்தில் விதிமீறல், அதாவது அங்கீகாரமற்ற மேம்பாடு இருப்பதை கண்டறிந்தால், சட்டப்படி, அந்த மேம்பாட்டுக்கான ஆவணங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குமாறு நிலம் அல்லது கட்டிட உரிமையாளர் அல்லது அந்த இடத்தில் குடியிருப்பவருக்கு நோட்டீஸ் அளிக்கலாம்.

அதேபோல, விதிமீறல் நடைபெற்றிருந்தாலோ, நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, நோட்டீஸ் அளித்த 7 நாட்களுக்குள் எவ்வித தகவலும் அளிக்காமல், அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யலாம். ஆய்வு செய்த பின்னர், கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதா அல்லது முடிவுற்றதா, திட்ட அனுமதியை தாண்டி விதிமீறல் இருந்தால் அதன் விவரம், கட்டிடமுடிப்புச் சான்றிதழ் பெறப்பட்டதா, கட்டிடம் மீதான வரி கணக்கிடப்பட்டுள்ளதா, குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதா ஆகியவை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரித்து, துறைக்கு அளிக்க வேண்டும்.

30 நாட்கள் அவகாசம்: ஒருவேளை விதிகளை மீறிஏற்கெனவே கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில், முன் அனுமதிபெறாமல் அல்லது அரசால் அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள இனங்களில், அந்த கட்டுமானத்தை இடித்து, நிலத்தை முன்பிருந்த நிலையில் காட்டுமாறு அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கலாம். இதற்கு30 நாட்கள் அவகாசம் அளிக்கலாம். கட்டிட அனுமதி வழங்கப்பட்டிருக்கும்பட்சத்தில், அந்த நிலம்அல்லது கட்டிடத்தை பயன்படுத்துவதை நிறுத்திவைக்கும்படி நோட்டீஸ் வழங்கலாம். பணிகள் நடைபெற்று வரும்கட்டிடம், நிலத்தைப் பொருத்தவரை, அலுவலர் ஆய்வின்போது விதிமீறல் கண்டறிந்தால், பணியைநிறுத்தி வைக்குமாறு நோட்டீஸ் வழங்கலாம். அவ்வாறு நிறுத்திவைக்காமல் பணி தொடரப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர், குறிப்பிட்ட விதிமீறல் பகுதியை 7 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிடலாம்.

சீல் வைக்க அனுமதி: இவற்றையும் மீறி கட்டிடப் பணிகள் தொடரும்பட்சத்தில், அந்தவளாகத்தை மூடி சீல் வைக்க திட்டக்குழுமத்துக்கோ, அலுவலருக்கோ அதிகாரம் உண்டு. மீண்டும் அனுமதி அளிக்கும் வரை பணிகளைத் தொடர அனுமதியில்லை. ஒருவேளை, சீல் உடைக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கலாம். விதிமீறல் தொடர்பான நோட்டீஸை, சம்பந்தப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ள வயது வந்தவர் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். முகவரியில் அவர் இல்லாதபட்சத்தில், முந்தைய முகவரியில் வழங்கலாம். அல்லது கட்டிடத்தில் ஒட்டலாம்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட கட்டிடம், நிலம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் புதிய விண்ணப்பம் அளிக்கப்பட்டால், அதை ஆய்வு செய்து, விதிமீறல் பகுதிஇடிக்கப்பட்டதை உறுதி செய்து, அனுமதி அளிக்கலாம். இல்லாவிட்டால் விண்ணப்பத்தை திருப்பிஅனுப்பலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இயற்கை நீதிக்கான புதிய விதிகள்: விதிமீறல் கட்டிடங்கள், நில மேம்பாடுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அனைவருக்கும் இந்த புதிய விதிகள் உதவியாக இருக்கும். அத்துடன், நடவடிக்கை எடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள், புதிதாக, முழுமையான விவரங்களுடன் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டால், அதன் மீது விசாரணை நடத்த இது வழிவகை செய்கிறது.விண்ணப்பித்த 7 நாட்களுக்குள், விண்ணப்பத்தின் மீதான அரசு உத்தரவுகள் உரிமையாளருக்கு தெரிவிக்கப்படும். இந்த விதிகள், குறிப்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் அல்லது குடியிருப்போருக்கு, இயற்கையான நீதியை பெற வழிவகை செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x