Published : 06 Nov 2022 04:44 AM
Last Updated : 06 Nov 2022 04:44 AM

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு | 2 ஆயிரம் பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் - பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2,048 வீரர்கள், 5,093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிவாரணம் வழங்க நடவடிக்கை

நவ.5-ம் தேதி (நேற்று) காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் சராசரியாக10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 87 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒரே நாளில் 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 140 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன.

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்களாக மொத்தம் 43 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் விழுந்த 65 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை வெளியேற்ற 763 மோட்டார் பம்ப்கள் தயாராக உள்ளன. மழைநீர் தேங்கிய இடங்களில் 250 மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 169 நிவாரண மையங்கள் தயாராக உள்ளன. அவற்றில் 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கியதால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2-ம் தேதி காலை 23,838 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு

வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதற்காக 1,149 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 899 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் என மொத்தம் 2,048 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன.

அவசர உதவிக்கு ‘1070’

இதுவரை ‘1070’ என்ற இலவச தொலைபேசி வழியாக 394 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 244 குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. 150 பிரச்சினைகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பாக சென்னையில் மட்டும் 206 அழைப்புகள் வந்தன. அதில் 132 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

5-ம் தேதி காலை 10 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்கொள்ளளவு 21 அடியாக (முழு கொள்ளளவு 24 அடி) உள்ளது. 400 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 539 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு 373கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x