Published : 04 Nov 2022 03:05 PM
Last Updated : 04 Nov 2022 03:05 PM

காலாவதி மருந்து விநியோக தடுப்பு நடவடிக்கை: கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. கரோனா பாதிப்புக்கு பின், குரங்கு அம்மை, இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதார துறை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 30ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகர்மயமாதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமுக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது. பருவநிலை மாற்றம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் கரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுகின்றன. நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, "அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாகாமல் இருக்க, மருந்துகள் தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம். இதுகுறித்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், தான் வழக்கறிஞராக இருந்தபோது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றபோது, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லை என்று அங்கிருந்த செவிலியர் கூறினார். பிறகு மருத்துவர் வலியுறுத்திய பின், தனக்கு அந்த மருந்து வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

காலாவதியான மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது அரசுத்தரப்பில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x