Published : 04 Nov 2022 07:12 AM
Last Updated : 04 Nov 2022 07:12 AM

பொறியியல் கலந்தாய்வின் இறுதிச்சுற்றில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு

சென்னை: பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வின் இறுதிச்சுற்றில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 50,533 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 668 இடங்கள் நிரப்பப்பட்டன.

அதன்பின்னர் பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதில் 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பின. இறுதியாக 4-ம் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 29-ல் தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 36,057 பேருக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் நவம்பர் 10-ம் தேதிக்குள் சென்று மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த இடங்கள் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல் கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இதுவரை 95,032 இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது 4-வது சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சென்று அதை உறுதி செய்யும்போது, முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பிய இடங்களின் விவரம் முழுமையாக தெரியவரும். இவற்றில் ஏற்படும் காலியிடங்களை நவம்பர் 3-வது வாரத்தில் நடைபெற உள்ள துணை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x