Published : 02 Nov 2022 11:44 AM
Last Updated : 02 Nov 2022 11:44 AM

வேலாயுதம்பாளையம் திமுக அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் புகழூர் நகர்மன்றத் தலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

கரூர்: வேலாயுதம்பாளையம் திமுக கட்சி அலுவலக பெயர் பலகை, கொடி சேதப்படுத்தப்பட்டும், தலைவர்கள் படங்களுக்கு அவமரியாதை செய்யப்பட்டதை அடுத்து பாஜகவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் திமுக கரூர் மேற்கு ஒன்றிய அலுவலகம் உள்ளது. இதன் பெயர் பலகையை மர்ம நபர்கள் கற்கள் வீசி நேற்று நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அலுவலகத்தின் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்த கட்சி கொடியை கீழே இறக்கி அவற்றைக் கிழித்து சாலையில் வீசியுள்ளனர்.

கரூர் செல்லும் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வரையப்பட்டிருந்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் படங்களில் மர்ம நபர்கள் சாணி வீசியுள்ளனர். திமுக பொறுப்பாளர்கள் மர்ம நபர்களை அடையாளம் கண்டு வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த பிரதீப், அண்ணா நகரை சேர்ந்த சுகுந்தன் ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த அறிந்த இன்று (நவ. 2) அங்கு திரண்ட திமுகவினர் புகழூர் நகர் மன்றத்தலைவர் குணசேகரன் தலைமையில் பாஜக மற்றும் பாஜக நிர்வாகிகள், பாஜக தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x