Published : 02 Nov 2022 04:02 AM
Last Updated : 02 Nov 2022 04:02 AM

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேலப்பாளையத்தில் 4 வீடுகளில் போலீஸார் சோதனை

திருநெல்வேலி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் மாநகர காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக காவல் துறையினரும் பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை சம்பவத்தை அடுத்து, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அரபிக் கல்லூரி பேராசிரியர் முகமது உசேன் மன்பஈ, ஏர்வாடி மதீனா நகரை சேர்ந்த அப்துல் காதர் மன்பஈ (40) ஆகியோரது வீடுகளில் மேலப்பாளையம் மற்றும் ஏர்வாடி போலீஸார் கடந்த 27-ம் தேதி சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் அவிநாஷ் குமார் உத்தரவின்பேரில், மேலப்பாளையம் காதர் மூப்பன் தெரு சாஹிப் முகமது அலி (35), சையது முகமது புகாரி (36), முகமது அலி (38), முகமது இப்ராஹிம் (37) ஆகிய 4 பேரின் வீடுகளிலும் போலீஸார் நேற்று காலை சோதனை நடத்தினர்.

கடந்த 2019-ல் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடித்து பலர் உயிரிழந்தனர். அப்போது, ஓர் இஸ்லாமிய அமைப்புக்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயன்றதாக, முகமது அலி உள்ளிட்ட இதே 4 பேர் வீடுகளில் ஏற்கெனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இவர்கள் 4 பேர் வீடுகளிலும் தனித்தனியாக கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. 4 பேர் மற்றும் குடும்பத்தினரின் செல்போன்களை போலீஸார் கைப்பற்றி, அதில் உள்ள அனைத்து எண்களையும் சேகரித்தனர். இவர்கள் யாருடன், என்ன பேசினர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். 4 மணி நேரம் சோதனை நடந்தது. ஆனால், முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். சோதனையின்போது, போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x