Published : 02 Nov 2022 07:27 AM
Last Updated : 02 Nov 2022 07:27 AM

ரூ.5000 கோடி செலவில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல்லாவரம் அடுத்த பம்மலில் நேற்று நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சென்னையை அடுத்த பம்மலில் நடந்த பகுதி சபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். உள்ளாட்சிகள் தினத்தையொட்டி அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டுகள் தோறும் பகுதி சபைக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றன தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மலில் முதல் பகுதி சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்று பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: இப்பகுதி மக்கள் விளக்குகளை மாற்ற வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அனைத்து பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை விரைந்து முடிக்கப்படும். பம்மல் பகுதிக்கு தார்ச் சாலைஅமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை திட்டம் ரூ.215 கோடியில் நடந்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்க ரூ.48.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 150 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீர் ஆகும் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஓரிரு மாதங்களில் தாம்பரம் மாநகராட்சிக்கு மட்டும் தினந்தோறும் 25 மி.லி. தண்ணீர் விநியோகம் செய்யப்படும். அதுமட்டுமல்ல சென்னையை அடுத்த பேரூர் பகுதியில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 400 மி.லி. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை புதியதாக அறிவித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, "மக்கள் தங்களின் பகுதி பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்து குறைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் இந்த கூட்டங்கள் நடைபெறுகின்றன" என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், “சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மக்களைக் கவனிக்கவில்லை என்ற குறை இனி இருக்காது. கிராமம், நகரம்என அனைத்து மக்களின் குறைகளையும் கேட்டுத் தீர்த்து வைக்கும் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது” என்றார். இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, சென்னை குடிநீர் வடிகால் வாரியமேலாண்மை இயக்குநர் கிர்லோஸ்குமார், தமிழ்நாடு வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர்கே.காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x