Published : 31 Oct 2022 12:46 PM
Last Updated : 31 Oct 2022 12:46 PM

எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம்: வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் | கோப்புப்படம்

சென்னை: திருச்சி பெரம்பலூர் சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவனர் முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஓய்வுபெற்ற, நோய்வாய்ப்பட்ட யானைகளை பராமரிப்பதற்காக 2019-ல் திருச்சி பெரம்பலூர் சாலையில் உள்ள, எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் உரிமம் இல்லாமல் வளர்க்கப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட யானைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

அங்கு முழு நேர யானைகள் மருத்துவ நிபுணர்கள் இல்லை. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது அங்குள்ள 7 யானைகளுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவதால், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கும் வகையில் செயல்பாட்டு வழிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மூத்த பாகன்கள் இல்லை. முழு நேர கால்நடை மருத்துவர்கள் இல்லை. மேலும், இந்த மையத்தின் பொறுப்பாளராக இருந்த மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா, வேலூருக்கு மாற்றப்பட்டதையடுத்து மையம் முறையாக பராமரிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.

இதையடுத்து, "மையத்தில் உள்ள யானைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அரசின் கடமை. மனிதர்களை போல விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், தற்போது வேலூரில் உள்ள வனத்துறை அதிகாரி சுஜாதா, எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்து அதன் நிலை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். மேலும், நாட்டில் உள்ள பிற யானைகள் மறுவாழ்வு மையத்தில் பின்பற்றப்படும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x