Published : 07 Nov 2016 09:33 AM
Last Updated : 07 Nov 2016 09:33 AM

ஆரோக்கியமான போக்குதான்! ஆனால்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

பல லட்சக்கணக்கான இளைஞர் கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது. ஐயாயிரத்து சொச்சம் பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்கிற பதவிக்கு, பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் முண்டியடித்துக்கொண்டு போகி றார்கள் என்றெல்லாம் விமர்சனங் கள் வைக்கப்பட்டாலும், டிஎன்பிஎஸ்சி என்கிற அமைப்பின் மீது இத்தனை லட்சம் பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே நல்ல செய்திதான்.

பயிற்சி மையங்கள், இலவச வகுப்புகள், பாதையோரப் புத்தகக் கடைகள், நாளேடுகள், தொலைக் காட்சி, வழிகாட்டிக் குறிப்புகள் என்று கடந்த சில வாரங்களாக அமர்க்களப்பட்டது. இது நல்ல முன்னேற்றமே. பெருவாரியான எண்ணிக்கையில் இளைஞர்களை, மீண்டும் படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டது என்கிற வகையில் தொடர்ந்து இதுபோன்ற தேர்வு களை வரவேற்கலாம். அது சரி... தற்போது நடந்து முடிந்துள்ள இத் தேர்வு எத்தன்மையதாய் இருந்தது?

டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்த வரை பொதுவாக, இளநிலைப் பதவிக்கான (எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகள்) தேர்வுகளில், பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகங்களில் இருந்து நேரடியாகக் கேட்கப்படும். இந்த முறை இது, வெகுவாக மாறி இருக்கிறது. பாடத்திட்டத்தின் படி, கணிதம்/ திறனறிப் பகுதி போக, 75 வினாக்கள் பொதுப்பாடத்தில். இவற்றில் இந்த முறை 45 வினாக் கள் வரை நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களே இடம்பெற்றுள்ளன.

இதற்கு என்ன பொருள்.? இனி யும் இளைஞர்கள், உலக நடப்பைத் தெரிந்துகொள்ளாது, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது இயலாது. இளநிலைப் பணியாக இருந்தாலும், செய்திகளைப் படித்து தெரிந்துகொள்ளல் மிக முக்கியமாகிவிட்டது. நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கிற வழக்கம் இருக்கிற இளைஞர்கள், எளிதில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்குச் செல்ல முடியும்; இவ்வழக்கம் இல்லாதவர்கள், தேர்ச்சி பெறுதல் கடினம் என்கிற நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. இது, முழு மனதுடன் நாம் வரவேற்க வேண் டிய ஆரோக்கியமான மாற்றம்.

நேரடியாக திரைப்படத் துறை யில் இருந்து வினாக்கள் தவிர்க் கப்பட்டு இருப்பதும், விளையாட்டுத் துறையில் 4 வினாக்கள் கேட்கப் பட்டு இருப்பதும், இளைஞர்களின் பார்வை எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டு இருப்ப தாகவே தோன்றுகிறது. பல வினாக் கள் மிக நேர்த்தியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

தேர்வர்களில் பலருக்கும், அறிவியல், பொதுக் கணிதப் பகுதி கள் கடினமானதாக இருந்திருக்க சாத்தியங்கள் உண்டு. எதிர்பார்க் கக்கூடியதுதான். ஆனால், கிராமப் பகுதியினரின் வலுவான பகுதி யாகிய பாடங்களில் கேள்விகள் குறைக்கப்பட்டு, பிற பகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது சில அச்சங்களை எழுப்பத்தான் செய்கிறது. இந்தத் தேர்வு, பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தவர் களுக்கு சாதகமாகவும், ஏதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் தானாகவே சுயமாகப் படித்து வெற்றி பெற நினைக்கிறவர்களுக்கு பாதக மாகவும் அமைந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது.

இதில் இருந்து விடுபட ஒரே வழி, கிராமப்புற தேர்வர்கள் செய்தித் தாள்/ செய்தி தொலைக்காட்சிகள் பக்கம் திருப்புவதுதான். ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் சீரமைக் கப்பட்டு, அவசியமான தரமான செய்திகள் அவர்களைச் சென்று சேரும் வழியை உறுதி செய்தாக வேண்டும். இதனை முதலில் செய்த பிறகு, தேர்வுக்கான கேள்விகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகிறபோது, நமது அச்சம் எந்த அளவுக்கு நியாமானது என்பது தெரிய வரும்.

இளைஞர்களே... நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் வாசியுங் கள். இதுவன்றி, போட்டித் தேர்வு களில் தேர்ச்சி பெறுவதும் அரசுப் பணியில் நுழைவதும் சாத்தியம் இல்லை. இளைஞர்கள், குறிப்பாக கிராமத்து இளைய தலைமுறை யினர் விழித்துக் கொள்வது, நம் சமுதாயத்துக்கே மிக நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x