Published : 29 Oct 2022 07:00 AM
Last Updated : 29 Oct 2022 07:00 AM

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் காதல் திருமணம்: இருவருக்கும் தலா ரூ.15,000 ஊதியத்துடன் வேலை

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் - தீபா காதல் ஜோடி திருமணம் காப்பக வளாகம் அருகே உள்ள கோயிலில் நேற்று நடைபெற்றது. படம்: ம.பிரபு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமனநல காப்பகத்தில் (மருத்துவமனை) சிகிச்சை பெற்று குணமடைந்த 42 வயதான மகேந்திரனும் 36 வயதான தீபாவும், காப்பகம் வாயிலில் உள்ள கோயிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழகசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மருத்துவர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.

பின்னர், காப்பக வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் இருவரும் தலா ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் மனநல காப்பகத்தில் வார்டு மேலாளராக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ வெற்றியழகன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையை சேர்ந்த மகேந்திரன் எம்.பில். படித்துள்ளார். நல்லவசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபா எம்.ஏ., பிஎட். படித்துள்ளார். இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மனதளவில் பாதிக்கப்பட்ட இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் பணி... மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குணமடைந்த மகேந்திரன் காப்பகத்தில் பராமரிப்பாளராகவும், தீபா அதே காப்பகத்தில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர். தந்தையை இழந்த இருவரும், குணமடைந்த பின்னர் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தங்களுடைய காதலை சக ஊழியர்களிடமும், காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து,பூர்ண சந்திரிகா 2 குடும்பத்தினரிடமும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

வேலைக்குச் செல்வதற்கு வசதியாக காப்பகத்தின் அருகிலேயே தம்பதியர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். 200 ஆண்டுகள் பழமையான கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த இந்த திருமணம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் கேட்ட போது, “இந்த திருமணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. காப்பக வரலாற்றில் இந்த திருமணம் இடம்பெறும். மகேந்திரன் - தீபா தம்பதிசந்தோஷமாக வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்துக்கு மகேந்திரன் தரப்பிலிருந்து அவரது மாமாவந்திருந்தார். வசதியான குடும்பமாக இருந்தாலும், வீட்டுக்குச் செல்ல மகேந்திரனுக்கு விருப்பம் இல்லை. அமைச்சர் இருவருக்கும் வேலை வழங்கியிருக்கிறார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x