Published : 28 Oct 2022 03:18 PM
Last Updated : 28 Oct 2022 03:18 PM

எம்எல்ஏக்கள், மக்கள் கோரிக்கை அடிப்படையில்தான் கோயில் நிதியில் முதியோர் இல்லங்கள்: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

பழனி கோயில்

சென்னை: உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுதான் கோயில் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி, சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோயில் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாயும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழனி தண்டாயுத பாணி கோயிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி, சென்னை, திருநெல்வேலி மற்றும் பழனியில் முதியோர் இல்லங்கள் துவங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ம் தேதி அறநிலைய துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சட்டப்படி கோயில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் அறங்காவலர்கள் மூலமாக பொதுமக்கள் ஆட்சேபங்களைப் பெற்று முடிவெடுக்க வேண்டும். மூன்று கோயில்களில் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க உள்ளனர் என தெரியவில்லை” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "பல காரணங்களால் பல கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அதிகாரம் குறித்து தலைமை நீதிபதி அமர்வும், கோயில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று முதியோர் இல்லங்கள் துவங்கப்பட்டுள்ளது. கோயில்களின் உபரி நிதிதான் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்தும், கோயில் நிதியில் கல்லூரி துவங்குவதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசும் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதாகவும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 130 கோடி ரூபாய் சமீபத்தில் ஒதுக்கப்பட்டது" என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, பழனி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க இரு தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x