Published : 27 Oct 2022 11:55 AM
Last Updated : 27 Oct 2022 11:55 AM

என்ஐஏ, உளவுத்துறை குறைபாடுகளை களைந்தால்தான் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தலாம்: கே.பாலகிருஷ்ணன் 

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

கோவை: "கோவையில் இப்படியொரு சம்பவம் நடக்கப்போகிறது என்று, மத்திய அரசின் என்ஐஏவுக்கும் தெரியவில்லை, மாநில அரசின் உளவுத்துறைக்கும் தெரியவில்லை எனும்போது, இரண்டு நிறுவனங்களிலும் உள்ள குறைபாடுகளை எதிர்காலத்தில் களைந்தால்தான் தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " கோவையில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்திருப்பது, சம்பவத்தின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்து அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வந்திருப்பது என்பது, வரவேற்கத்தக்கது, பாராட்டதகுந்தது. அதேபோல், நேற்று முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, இதில் பன்னாட்டு பின்னணி தொடர்புடைய சூழலில், இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைப்பதும் அரசின் ஒரு நல்ல நடவடிக்கை.

ஆனால், அதே சமயத்தில் நான் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால், இப்படியான வெடி விபத்துகள் நடப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதை ஏன் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை. எனவே உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். அது இயற்கையான பலகீனமா, ஏன் இவ்வாறான குறை ஏற்பட்டது, குறை இருப்பதை பார்க்கமுடிகிறது. எனவே அந்த குறை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கை எந்த மூலையில் ஏற்பட்டாலும், அதனை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தமிழகத்தின் உளவுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும். இதில் உயிரிழந்திருக்கும் ஜமேச முபீன் உள்பட ஒரு 50-க்கும் மேற்பட்டவர்கள் என்ஐஏ விசாரணை வளையத்திற்குள் ஏற்கெனவே இருந்தவர்கள். இவர்களை ஏற்கெனவே என்ஐஏ கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அவர்களால்கூட ஏன் இந்த தீவிரவாத நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது என்ஐஏவின் புலனாய்வு பணிகளில்கூட ஒரு மந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களின் பணியிலும் ஒரு குறை ஏற்பட்டிருப்பதை யதார்த்தப்பூர்வமாக என்ஐஏ ஒத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் என்ஐஏவுக்கும் இது தெரியவில்லை, மாநில அரசின் உளவுத்துறைக்கும் இது தெரியவில்லை எனும்போது, இரண்டு நிறுவனங்களிலும் உள்ள குறைபாடுகளை எதிர்காலத்தில் களைந்தால்தான் தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x