Last Updated : 27 Oct, 2022 09:00 AM

 

Published : 27 Oct 2022 09:00 AM
Last Updated : 27 Oct 2022 09:00 AM

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சிறு நகர மக்களுக்கு அவதி

சேலம்: பண்டிகைகளின்போது இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை, வட்டார தலைநகரங்களில் இருந்தும் இயக்க வேண்டும், என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டம் 24-ம் தேதியுடன் முடிவடைந்தாலும், அதற்கான பயண அவதி நேற்று தான் பலருக்கும் முடிவடைந்தது. ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டத்துக்காக வெளியூரில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் வசிப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக நெரிசலை சமாளிக்க தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவும், பண்டிகைக்கு பின்னரும் சிறப்பு பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன. தீபாவளிக்கு மட்டுமல்ல, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அவை திட்டமிட்டு இயக்கப்பட்டாலும் கூட, மக்களில் பலர் பேருந்துகளில் இருக்கை கிடைக்காமல், நின்று கொண்டும், நீண்ட தூர பயணத்தை சிறுசிறு பயணமாக பிரித்து மேற்கொண்டும் அவதிகளுடன் சொந்த ஊர் வந்து செல்கின்றனர். மாவட்டத் தலைநகரங்களை மையப்படுத்தியே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், தலைநகர மக்களுக்கு பிரச்சினை குறைவு. ஆனால், சிறு நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கை கிடைப்பது அரிது.

தொடரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகளில் வந்து சென்ற மக்களில் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பண்டிகை கால சிறப்பு பேருந்துகளில் மட்டுமல்ல, வாரவிடுமுறை, தொடர் விடுமுறை ஆகியவற்றின்போதும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் சேலத்துக்கு வந்தால் தான் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க முடியும். வழியில் உள்ள சிறு நகரங்களில் பேருந்துகள் பெரும்பாலும் நிற்பதில்லை.

உதாரணமாக, வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் போன்ற சிறு நகரங்களில் இருந்து ஏராளமானோர் சென்னை புறப்படுகின்றனர். ஆனால், சேலத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் இருக்கை நிரம்பிய பின்னரே வருவதால், வழியோர சிறு நகரங்களில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பயணிகள், வேறு வழியின்றி பேருந்தில் நின்று கொண்டே பயணித்து, சென்னை செல்ல வேண்டியுள்ளது.

எனவே, பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் வட்டார தலைநகரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் குறைந்தபட்சம் ஒரு பேருந்து இயக்கினால் பெண் பயணிகளுக்காவது உதவியாக இருக்கும். பேருந்து இயக்கப்படும் தேதி, நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிவித்துவிட்டால், முடிந்தவரை முன்பதிவு செய்து மக்கள் பயணத்தை மேற்கொள்வர்.

தனியார் ஆம்னி பேருந்துகள், செல்போன் செயலி மூலம் இருக்கை முன்பதிவு செய்யும்போது, அரசுப் பேருந்துகளும் இந்த நடைமுறையைப் பயன்படுத்தினால், மக்கள் அவதியின்றி பயணம் மேற்கொள்ள முடியும், என்றனர். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் சேலத்துக்கு வந்தால் தான் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x