Last Updated : 25 Oct, 2022 08:23 PM

1  

Published : 25 Oct 2022 08:23 PM
Last Updated : 25 Oct 2022 08:23 PM

கார் வெடிப்பு சம்பவம் | UAPA-வின் கீழ் 5 பேர் கைது: கோவை காவல் ஆணையர் வெளியிட்ட புதிய தகவல்கள்

வே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்

கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை மாநர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இன்று கோவையில் இன்று (அக்.25) செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 23-ம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, மாருதி 800 வாகனத்தில், 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம், கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் வெடித்து சிதறியதில், உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். அதன் தொடர்ச்சியாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உக்கடம் சரக உதவி ஆணையர் தலைமையில் புலன்விசாரணை மேற்கொண்டு, உடனடியாக அந்தப் பகுதி காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தடயங்கள் பாதுகாக்கப்பட்டன. தடயவியல் வல்லுநர்கள் வர வழைக்கப்பட்டு, கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் பிரிவினர் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு, அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த நபர் யார் என்பதை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்தோம்.

மாருதி 800 வாகனம், 10 பேரிடம் இருந்து மாறி வந்துள்ளது. அந்த 10 பேரையும் உடனடியாக கண்டறிந்து விசாரித்தோம். அன்று மாலைக்குள்ளேயே கார் எங்கிருந்து வந்தது என்ற விவரத்தையும், உயிரிழந்த நபர் யார் என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டு, உடனடியாக ஜமேஷா முபினின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. அதில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம். தொடர்ச்சியாக புலன் விசராணை நடந்து வந்தது.

உதவி ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரி முதன்மை விசாரணை அதிகாரியாகவும், அவருக்கு உதவி செய்வதற்காக ஆறு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினரும் செயல்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, உபா (UAPA - சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்), கூட்டுச் சதி, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் அடிப்படையில் சந்தேகப்படக்கூடிய நபர்களிடம் விசாரிப்பது, அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்படுவது தொடரும். இந்தச் சம்பவம் நடந்த போது, 200 மீட்டர் தூரத்தில் போலீஸார் சோதனையில் இருந்துள்ளனர். மேற்கொண்டு எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படாத வகையில் காவல் துறை செயல்பட்டுள்ளது. அந்த இடத்தில் போலீஸார் இருந்ததால், அந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கக்கூடும் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

கார் வெடிப்புச் சம்பவத்தில் கைதானவர்கள்

இதன் தொடர்ச்சியாக சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுவதைத் தடுக்க மாநகரில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் கேரளா சென்று வந்தது தெரிகிறது. அவர்கள் எதற்காக சென்றனர், யாரை சந்தித்தனர் என்ற தகவல்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வழக்கு தொடர்பாக எல்லா கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தடயவில் அறிக்கை வந்தவுடன் தான் முழு விவரம் தெரியவரும். வாகனத்தில் இருந்த டிரம்மிள் என்ன பொருள் இருந்தது என தடயவியல் அறிக்கைக்கு பின்னர் தெரியவரும். ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய 3 பேரும், முபினின் வீட்டிலிருந்து வெடிமருந்துகளை ஏற்றுவதற்கு துணை புரிந்துள்ளனர்” என்று அவர் கூறினார். | கைதானோர் விவரம் > கோவை கார் வெடிப்பு சம்பவம் | 5 பேர் கைது; திட்டமிட்ட சதியா என விசாரணை - நகரில் போலீஸ் குவிப்பு

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அதன் விவரம் > ‘ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் தொடர்பு’ - கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் பின்னணி

இதனிடையே, கோவையில் கார் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், கோட்டைமேடு பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையால் மிகப் பெரிய நாசவேலை தடுக்கப்பட்டது போலீஸ் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. அதன் விவரம் > கோவை கார் வெடிப்பு சம்பவம் | போலீஸின் வாகன சோதனையால் மிகப் பெரிய நாசவேலை தடுப்பு?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x