

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் அலங்கோலமான ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, பண வீக்கம் குறைந்துள்ளது என பல மேடைகளில் பேசி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துள்ளது. பண வீக்கம் அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82-ஐ தாண்டிவிட்டது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை 22 கோடியாக அதிகரித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க பிரதமர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறி பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் 33 சதவீதம் உள்ளனர். இந்தியா பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்கு போயுள்ளது.உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை பல்வேறு வகைகளில் மாநிலங்கள் மீது திணித்து வருகிறார். மத்திய அரசின் பணிக்கான தேர்வுகள், மத்திய அரசின் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்தி மொழி பேசினால் மட்டுமே வேலை என்று கூறி இந்தி திணிப்பை செய்கிறார்.இதனால் படிப்படியாக மத்திய அரசு இந்தியை திணிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் இந்தி திணிப்பு என்பது புதுச்சேரியிலும், தமிழகத்திலும் எடுபடாது. எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஆளுநர் தமிழிசை மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துவது, நிர்வாகத்தில் தலையிடுவது, விதிகளை மீறுவது குறித்து சுட்டிக் காட்டினேன். எனக்கு அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தான் மக்கள் சந்திப்பை நடத்துகிறேன். தெலங்கானாவிலும் மக்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறேன் என கூறி அது தொடர்பான புத்தகம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். ஆனால் உண்மையில், நான் மக்கள் சந்திப்பை பற்றி தெரிவிக்கவில்லை. அவரை மக்கள் சந்திக்கலாம், பேசலாம், அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் மக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடத்துகிறார். இது நிர்வாகத்தில் தலையிடுவதாகும். இதேபோன்று தான் கிரண் பேடியும் செய்தார்.
தனக்கு புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பி தீர்வு காண சொல்லலாம். ஆனால், அவர் தர்பார் நடத்த அதிகாரம் இல்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், துணைநிலை ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிட கூடாது, அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அனுப்புவதை ஏற்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்து தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பினை முழுமையாக அவர் படித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அந்த தீர்ப்பின் நகலை அவருக்கு அனுப்பியுள்ளேன். அவர் படித்துவிட்டு அதன்படி நடக்க வேண்டும்.
ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கிரண் பேடி மீது தொடரப்பட்டுள்ளது. தற்போது, உள்ள ஆளுநரும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காவிட்டால், அவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன். மின்துறை தனியார்மய விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன? 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஏன் விளக்கம் அளிக்கவில்லை. இந்த அலங்கோலமான ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.