Published : 15 Oct 2022 07:17 AM
Last Updated : 15 Oct 2022 07:17 AM

நெல் ஈரப்பதம் குறித்த ஆய்வு: மத்திய குழு இன்று தமிழகம் வருகை

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுமேற்கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள் இன்று தமிழகம் வருகின்றனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி,கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மாநில அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு சில தளர்வுகளை அளித்தது.

அதாவது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குப் பதிலாக 19 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவ நெல் அதிக ஈரப்பதத்துடன் வரும் என்று தெரிகிறது.

தொடர்ந்து வலியுறுத்தல்: எனவே, விவசாயிகளின் துன்பத்தை குறைக்கும் வகையில், தமிழக அரசின் கொள்முதல் முகமையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லைகொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இதுதவிர, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன்,மத்திய உணவுத் துறைச் செயலரை சந்தித்து, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரிஉள்ளார். இந்நிலையில், மத்திய உணவுத் துறையானது, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்யுமாறு, ஹைதராபாத்தில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் துணைஇயக்குநர் எம்.எஸ்.கான், சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று, பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை சேகரித்து, ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், தமிழகத்தில் மழை பாதிப்பு மாவட்டங்களில் இருந்து நெல் மாதிரிகளையும், அவற்றுடன் தேவையான ஆவணங்களையும் வழங்குமாறும், மழை நிலவரம், அறுவடை செய்ய முடியாத நிலை, எதிர்பார்க்கப்படும் கொள்முதல் அளவு குறித்த விவரங்களையும் அளிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x