Last Updated : 03 Nov, 2016 09:15 AM

 

Published : 03 Nov 2016 09:15 AM
Last Updated : 03 Nov 2016 09:15 AM

புளியந்தோப்பில் ரூ.48 கோடியில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக திறக்கப்படாத நவீன இறைச்சிக் கூடம்

சென்னை புளியந்தோப்பில் நவீன வசதிகளுடன் ரூ.48 கோடியில் கட்டப்பட்ட இறைச்சிக் கூடம் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. அதை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதியினர்.

சென்னை பெரம்பூர் புளியந் தோப்புப் பகுதியில் நூற்றாண்டு பழமையான இறைச்சிக்கூடம் உள்ளது. இது 1903-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் கட்டப் பட்டது. இங்கு தினமும் 1,500 ஆடு கள், 150 மாடுகளை வெட்ட முடியும். தற்போது மக்கள்தொகைக்கு ஏற்ப இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதாலும், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாலும் நவீன இறைச்சிக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது.

கடந்த 2009 திமுக ஆட்சியில் மாநகராட்சி மேயராக மா.சுப்பிரமணியன் இருந்தபோது, புளியந்தோப்பில் ரூ.48 கோடியில் நவீன இறைச்சிக் கூடம் அமைக்க டெல்லியைச் சேர்ந்த ‘ஹிந்த் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நவீன இறைச்சிக் கூடம் கட்டும் பணியை 2009 செப்டம்பரில் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 9 ஏக்கரில் பரந்துள்ள பழமையான இறைச்சிக் கூடத்தை மாற்றியமைத்து நவீன இறைச்சிக் கூடம், பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

இறைச்சிக் கூடத்தின் பெரும் பாலான பணிகள் 2011-ல் முடிக்கப் பட்டன. இந்த நவீன இறைச்சிக் கூடத்தில் ஒரு மணி நேரத்தில் 500 ஆடுகள், 60 மாடுகளை வெட்ட முடியும். இறைச்சிகளை வெட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் இங்கு உள்ளன. கழிவுகளை நவீன முறையில் சுத்திகரித்து பூங்காக்களுக்கு பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. வெட்டிய இறைச்சியைப் பாதுகாக்க நவீன குளிர்பதனக் கிடங்கு, பதப்படுத் தும் அறைகள், ஆய்வகம், பொதுக் கூடம், மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி, வாகன நிறுத்துமிடம், வெட்டப்படும் விலங்குகளின் தலை, கால், குடல் ஆகியவற்றை விற்க சிறிய வணிக வளாகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இறைச்சிக் கூடம், பூங்கா 2010-ம் ஆண்டிலேயே திறக்கப்படும் என அப்போதைய மேயர் மா.சுப்பிர மணியன் அறிவித்தார். ஆனால், இறைச்சிக் கூடத்தை தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் விட ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சில தொழிலாளர்களிடம் பேசியபோது, ‘‘நாங்கள் தலைமுறை தலை முறையாக இந்த இறைச்சிக் கூடத்தை நம்பி பிழைப்பு நடத்து கிறோம். நவீனம் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இறைச்சிக் கூடத்தை மாநகராட்சியே நடத்த வேண்டும்’’ என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுபற்றி விசாரித்ததற்கு, ‘‘தொழிலாளர்களின் எதிர்ப்பாலும், நீதிமன்றத்தில் இதுசம்பந்தமான வழக்கு நிலுவையில் இருப்பதாலும் நவீன இறைச்சிக் கூடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசும், மாநகராட்சி மேயரும்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றனர்.

தொழிலாளர் தரப்பில் பேச்சு நடத்தி, புதிய இறைச்சிக் கூடத்தை உடனே திறக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x