Last Updated : 08 Oct, 2022 06:51 PM

 

Published : 08 Oct 2022 06:51 PM
Last Updated : 08 Oct 2022 06:51 PM

ஹெல்மெட்டின் மகத்துவம் சொல்லும் தரவு: 3 ஆண்டுகளில் புதுச்சேரியில் 3,140 சாலை விபத்துகள்; 445 உயிரிழப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் முறையற்ற வகையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. 3 ஆண்டுகளில் 3,410 சாலை விபத்துக்களில் 445 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘‘முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுச்சேரியில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவனும் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்பட்டு உ யிரிழந்தனர்.

இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தல் அவசியம். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வது வாகன விபத்தில் தலைக்கு காயம் ஏற்படுவதை 80 சதவீதம் தடுக்கிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் ஹெல்மெட் அணியாததன் காரணமாக 181 பேர் இறந்துள்ளனர். இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் அலுவலகங்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான ஹெல்மெட்டினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால், எந்த வாகனம் ஓட்டும்பொழுதும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாது இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1,000 அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

செல்போனில் பேசாமல் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம். புதுச்சேரியில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும்.

மேலும், வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் தகுதி ரத்து, சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் அனைவரும் தகுதியான ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லாமல் சாலை விபத்துகளை தவிர்க்குமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்துகிறது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x