Last Updated : 14 Nov, 2016 02:25 PM

 

Published : 14 Nov 2016 02:25 PM
Last Updated : 14 Nov 2016 02:25 PM

ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்

மதுரையில் உள்ள வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகளை பெற விடுமுறை நாளான நேற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாடு முழுவதும் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் திடீரென அறிவித்தார். மேலும் புதிய ரூ. 2 ஆயிரம், ரூ. 500 நோட்டுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற டிச. 30-ம் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம். கறுப்பு பணத்தை முடக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து, புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பால் வங்கி, அஞ்சலகங்களில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. 2 நாட்களுக்கு பின் ஏடிஎம் மையங்கள் இயங்கும் என அரசு அறிவித்தபோதிலும், பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஒரு சில ஏடிஎம் மையங்களில் 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே எடுக்க முடிகிறது. அதுவும் உடனடியாகத் தீர்ந்து விடுவதால் ஏடிஎம்கள் முடங்கும் நிலை ஏற்படுகிறது.

வங்கிகளில் மட்டுமே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன. இதை வெளியில் கடைகளில் கொடுத்து சில்லறையாக மாற்றுவதிலும் மக்களுக்கு சிக்கல் உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, புதிய 2 ஆயிரம் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என்பதால், தினமும் அனைத்து வங்கிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். விடுமுறை நாளான நேற்றும் மதுரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதுபற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சகஜ நிலை ஏற்பட ஒரு மாதத்துக்கு மேலாகும். புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிட்டாலும் போதுமான அளவில் வங்கிகளுக்கு அனுப்பப்படவில்லை. தற்போதுள்ள ஏடிஎம் மையங்களில் பழைய நோட்டுகளை கையாளும் வகையில்தான் தொழில்நுட்பம் உள்ளது. புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் இருந்து பெறும் வகையில் வங்கிகள் சார்ந்த பொறியியல் பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்க கூடுதலாக ரூ. 100 நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

ஒத்தக்கடை வணிகர் சங்கச் செயலாளர் எம்.ஏ. இஸ்மாயில் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பால் தொழில்கள் முடங்கி உள்ளன. அறிவிப்பு வெளியிடும் முன்பே ஏடிஎம்களில் போதுமான அளவு ரூ. 100 நோட்டுகளை நிரப்பி இருந்தால், பொதுமக்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

தற்போதைய சிக்கலை விரைவில் களைய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x