Published : 26 Nov 2016 08:39 AM
Last Updated : 26 Nov 2016 08:39 AM

17-வது நாளாக சில்லறை நோட்டு தட்டுப்பாடு: காசிமேட்டில் ரூ.1 கோடிக்கு மீன் வியாபாரம் கடும் பாதிப்பு

சில்லறை நோட்டு தட்டுப்பாடு 17-வது நாளாக நீடித்து வரும் நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இதுவரை ரூ.1 கோடி அளவுக்கு சில்லறை மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகமாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் விளங்குகிறது. இங்கிருந்து 744 விசைப் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், கட்டுமர படகுகளும் மீன்பிடிக்கச் செல்கின்றன. இவைகளில் பிடிக்கப்படும் மீன்கள், வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங் களுக்கும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாது, மீன்பிடி துறைமுக வளாகத்திலேயே சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது. தற்போது சில்லறை நோட்டு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், பொதுமக்கள் வரத்து குறைந்து வியாபாரம் முற்றிலும் முடங்கி, அந்த இடமே வெறிச்சோடி காணப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை- செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க செயலர் எம்.விஜேஷ் கூறியதாவது:

சில்லறை தட்டுப்பாடு காரணமாக மீன்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் 80 சதவீத படகுகள், மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் பெரிய அளவில் வருவாய் இழந்துள்ளனர். சில்லறை விற்பனையில் ஈடுபடும் மீனவர்களின் நிலை அதைவிட மோசம். கடந்த 17 நாட்களில் அவர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பாக அங்கு மீன் விற்பனை செய்து வரும் மஞ்சுளா கூறியது: இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளும், வார நாட்களில் 65 கடைகளும் திறக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு நபரும் சராசரியாக வார நாட்களில் தினமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வியாபாரம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.10 ஆயிரம் வரை வியாபாரம் நடக்கும். தற்போது சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீன் வாங்க வரும் மக்கள் குறைந்துவிட்டனர். அப்படியே வந்தாலும் பழைய ரூ.500 நோட்டு அல்லது புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை தான் கொண்டு வருகின்றனர். அதை நாங்கள் வாங்குவதில்லை இதனால் தினமும் ரூ.2 ஆயிரத்துக்கு கூட மீன் விற்க முடியவில்லை. கடந்த இரு வாரங்களாக வருவாய் இழந்து இருக்கிறோம். மீன் விற்போரும் குறைந்துவிட்டனர்.

இத்தொழிலே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x