Published : 01 Oct 2022 04:02 PM
Last Updated : 01 Oct 2022 04:02 PM

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பு: உத்தரவை ரத்து செய்யக் கோரி கம்யூ., விசிக மனு

கோப்புப்படம்

சென்னை: சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்த அனுமதி கேட்டு கடந்த 29ம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடந்த 29-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . முன்கூட்டியே எந்த நோட்டீசும் அனுப்பாமல், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், அதே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் கூறி, எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும், எங்களையும் ஒரே மாதிரியாக பாவிக்க முடியாது.எனவே சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x