Published : 03 Nov 2016 10:11 AM
Last Updated : 03 Nov 2016 10:11 AM

மழை நீரோடு கழிவு நீர் தேங்கியதால் நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்: பல்லாவரத்தில் பரபரப்பு

பல்லாவரத்தில் மழைநீரோடு கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் நகராட்சி 3-வது வார்டு காமராஜர் நகர் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் ஜிஎஸ்டி சாலையை கடக்கும் மழைநீர் கால்வாயில் அடைப்புகள் உள்ளதாலும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் குறுகியதாலும் மழை பெய்யும்போது மழை நீரோடு கழிவு நீர் கலந்து கால் வாய்களில் செல்லாமல் காமராஜர் நகர் பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோரி பலமுறை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பெய்த மழையில் மழைநீரோடு கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு தேங்கியது. இதில் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் குரோம் பேட்டை - பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸார் சமாதானப் படுத்தி கலைய செய்தனர்.

காமராஜர் நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டபோது அவர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x