Published : 02 Nov 2016 09:14 AM
Last Updated : 02 Nov 2016 09:14 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை குழு: மேலும் 7 பேர் நியமனம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வரும் நடமாடும் ஆலோசனைக் குழுவுக்கு மேலும் 7 உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிப்பதற்காக நடமாடும் உளவியல் ஆலோசனை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த குழுவினர் பிரத்யேக வாகனங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள அரசுப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

மாணவர்களின் பயத்தைப் போக்குதல், தேர்வு நேரத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பராமரித்தல், உடல் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றம் சம்பந்தமான மன அழுத்தத்தை போக்குவது, தற்கொலை எண்ணத்தை தவிர்ப்பது, தாழ்வு மனப்பான்மையை போக்குவது, மாணவ, மாணவிகளின் பொதுவான சந்தேகங்களைப் போக்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் பயணம் செய்து வரும் இந்த நடமாடும் உளவியல் ஆலோசனைக் குழுவில் ஏற்கெனவே 10 உளவியல் நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், கூடுதலாக 7 உளவியல் நிபுணர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்தது. இந்த உளவியல் நிபுணர்களை தேர்வு செய்வதற்கான முதல்கட்ட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x