Published : 11 Nov 2016 12:44 PM
Last Updated : 11 Nov 2016 12:44 PM

திங்களூர் அருகே 55 ஆண்டு பழமையான கூட்டுறவு சங்கம்: புதிய கட்டிடம், மின் சக்கரம் வழங்கி மண்பாண்ட தொழிலை மேம்படுத்த கோரிக்கை

திங்களூர் அருகே 55 ஆண்டுகளாக இயங்கி வரும் மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் திங்களூரை அடுத்த பூளுவப்பட்டியில், கடந்த 1961-ம் ஆண்டு முதல் மண்பாண்ட தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. கதர் கிராமத்தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த சங்கத்தில் 110 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 30 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 55 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த சங்கம் இயங்கி வருகிறது. பழடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள சங்க கட்டிடத்தில் இப்போதும் மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கும் பணியை தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பழமை வாய்ந்த சங்கத்திற்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் எம்.அருணகிரி, செயலாளர் கே.மணியன் ஆகியோர் கூறியதாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் முறையாக பதிவு செய்து, மண்பாண்டத் தொழில் செய்து தொடர்ந்து 55 ஆண்டுகளாக எங்கள் சங்கம் இயங்கி வருகிறது. நத்தம் புறம்போக்கில் சங்க கட்டிடம் அமைந்து இருப்பினும், கட்டிடத்திற்கான வரியை தொடர்ந்து செலுத்தி வருகிறோம்.

இந்த நிலத்திற்கு பட்டா வழங்கி, கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அடுத்து கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநர் ஆய்வு நடத்தினார். அதன்பின் ரூ.5.10 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்ட திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

தற்போது கையால் சுற்றும் சக்கரத்தைக் கொண்டு மண்பாண்டங்கள் செய்து வருகிறோம். எங்களுக்கு மின்சார உதவியால் இயங்கும் சக்கரம் பொருத்தி தரும் திட்டமும் நிறைவேற்றப் படவில்லை. மழைக்காலத்தின் போது மண்பாண்டத் தொழிலை செய்ய முடியாது என்பதால், ரூ.4000 வீதம் அரசு நிவாரணம் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை.

இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய விற்பனை மையம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து கதர் கிராமத் தொழில்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, புதிய கட்டிடம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதேபோல் மின்சாரம் மூலம் மண்பாண்டம் செய்யும் சக்கரங்களை இயக்கும் வசதி ஏற்படுத்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்களுக்கான நிவாரணத் தொகை தொடர்பாக அரசின் உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை, என்றனர்.

திங்களூர் அருகே 55 ஆண்டுகள் பழமையான மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அபாய நிலையில் உள்ளது. அடுத்தபடம்: மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள 80 வயது பெரியவர் பெரியதம்பி.

இளைஞர்களுக்கு ஆர்வமில்லை

மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் 80 வயதான பெரியதம்பியிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

கடந்த காலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது இளைய தலைமுறையினர் இத்தொழிலுக்கு வர மறுக்கின்றனர். இந்த தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க, யாராவது மண்பாண்ட தொழிலை பழக விரும்பினால் பயிற்சி கொடுக்க தயாராக உள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x