Published : 19 Sep 2022 12:56 PM
Last Updated : 19 Sep 2022 12:56 PM

அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் 

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கபட்டனர்.இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது. எனவே கே.சி .பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார். அப்போது, கே.சி. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து, தனக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த நீக்கம் செல்லாது" என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் ஏதாவது மனு நிலுவையில் உள்ளதா? " எனவும் கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர் தரப்பில், "தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும்" தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம்" என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x