Published : 25 Nov 2016 02:42 PM
Last Updated : 25 Nov 2016 02:42 PM

தினமும் 10 மணி நேரம் மூடப்படும் ரயில்வே கேட்: நீடாமங்கலம் பொதுமக்களின் அவதிக்கு தீர்வு காணப்படுவது எப்போது?

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்படும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்திலேயே ரயில்வே பிளாட்பாரத்துக்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற ஊர் நீடாமங்கலம் மட்டும்தான். தஞ்சையிலிருந்து, நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலிருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்கின்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் இச்சாலை வழியாகத்தான் நடைபெறுகிறது.

இந்நிலையில், நீடாமங்கலத்தைக் கடந்து தினமும் 14 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள், 4 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. இதுதவிர, காரைக்கால் பகுதியிலிருந்து அதிகபட்சம் 12 சரக்கு ரயில்களும் இதன் வழியாகவே செல்கின்றன. இதற்காக, நீடாமங்கலத்தில் உள்ள ரயில்வே கேட் (எண்-20) தினமும் குறைந்தது 10 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்படுகிறது.

குறிப்பாக மன்னை, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக தினமும் 4 முறை காலை, மாலை இருவேளைகளிலும் தலா 30 நிமிடங்கள் ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும்போது இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இதுதவிர, நீடாமங்கலம் ரயில் நிலையம் சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையமாக உள்ளது. இங்கு நெல் ஏற்றும்போதும், யூரியா உள்ளிட்டவற்றை இறக்கும்போதும் தேசிய நெடுஞ்சாலைக்கு வழிவிடுவதற்காக வேகன்கள் பிளாட்பாரத்துக்கு இடையில் பிரித்து நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு பிரிக்கும்போதும், வேலை முடிந்தவுடன் மீண்டும் வேகன்களை இணைக்கும்போதும் தொடர்ச்சியாக 1 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

ஒரு சரக்கு ரயிலின் வேகன்களை நிரப்ப 72 முதல் 87 லாரிகள் வரை வந்து செல்கின்றன. இந்த லாரிகளாலும் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியைக் கடக்க முடியாமல் பெரும் பாதிப்படைகின்றன. தஞ்சை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் இந்த ரயில்வே கேட் மூடப்படும்போது ஏற்படும் காலதாமதத்தால் உயிரிழக்கவும் நேரிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக உள்ள இந்த முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வர்த்தக சங்கத் தலைவர் பிஜிஆர்.ராஜாராமன் கூறியது:

ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. பலநாட்கள் நகரத்தைத் தாண்டியும் இருபுறமும் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் காத்திருக்கின்றன. கடைவீதியில் இரு சக்கர வாகனங்களைக்கூட நிறுத்த முடியாத நிலை உள்ளதால், உள்ளூர் பொதுமக்கள் நீடாமங்கலம் வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளது. ரயில்வே கேட் பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்து ஓய்ந்துவிட்டோம். விரைவில் தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம். இந்நிலையில், மேம்பாலம் கட்டும் நடவடிக்கையைத் தடுக்க வர்த்தக சங்கம் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

நீடாமங்கலத்தைச் சேர்ந்த யூ.சந்துரு கூறியது:

விரைவில் நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் வழக்கு தொடர்ந்தேன். அதில், ரயில்வே கேட் மூடுப்படுவதற்குள் கேட்டை கடந்துவிட வேண்டும் என்று வேகமாக வந்த வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் மட்டுமே 30 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று அப்போது ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தேன். பாலம் கட்டுமானப் பணியைத் தொடங்கி விடுவோம் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். விரைவாக செய்துமுடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

தெற்கு ரயில்வே ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளர் டி.மனோகரன் கூறியது:

இத்திட்டத்துக்காக கடந்த 2014-15 நிதியாண்டிலேயே ரூ.53.92 கோடி நிதியை ரயில்வே துறை ஒதுக்கிவிட்டது. கடந்த ஓராண்டாக இந்த நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாநில அரசும் தனது பங்களிப்பு நிதியான 50 சதவீதத்தை விடுவித்தவுடன் பணிகள் விரைவாக நடைபெறும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்களை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ரயில்வே கேட் மூடப்படுவதற்குள் ரயில் நிலையத்தை கடந்து சென்றுவிட வேண்டுமென்பதற்காக வேகமாக வந்து, மூடப்படும் ரயில்வே கேட் கம்பத்தில் மோதும்படியாக மட்டுமே ஆண்டுக்கு 4 விபத்துகள் நேரிடுகின்றன.

(பாப்பையன் தோப்பு அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாகச் செல்ல மண் சாலையில் செல்லும் வாகனங்கள்)

நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜன்.ரமேஷ் கூறியது:

நீடாமங்கலம் பாப்பையன் தோப்பு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ரயில்வே பிளாட்பாரத்தின் வழியாகச் சென்று, அந்த சுரங்கப்பாதையில் சிறியரக ஆம்புலன்ஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் சென்றுவருகின்றன. ஆனால், இந்த சுரங்கப்பாதையையொட்டிய சுமார் 1 கிலோமீட்டர் மண் சாலை மேடும், பள்ளமுமாக உள்ளது. சிறுமழை பெய்தால்கூட தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, இந்தச் சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.

அதுபோல, இரவு 10 மணிவரை ரயில்கள் வந்துசெல்கின்றன. அதுவரை நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதில்லை.

ஆனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான காவல் பிரிவு நீடாமங்கலத்தில் இல்லை. சட்டம் ஒழுங்கு காவலர்களே போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவர்களும், இரவு 7.30 மணிக்குப் பிறகு இருப்பதில்லை. எனவே, போக்குவரத்து காவல் பிரிவை நீடாமங்கலத்தில் தொடங்குவதுடன், பெரியார் சிலை அருகே புறக்காவல் மையம் அமைக்க வேண்டும்.

மேம்பால பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அரசு நடவடிக்கை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் கூறியது:

நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நீடாமங்கலத்தில் சாலை மேம்பாலம் ஒன்றும், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்றும் கட்டப்பட உள்ளது. நீடாமங்கலத்தில் கும்பகோணம் சாலையிலும், தஞ்சை சாலையிலும் உள்ள ரயில்வே கேட்டுகளை கடக்காமல், வாகனங்கள் செல்வதற்கு வழிவகை ஏற்படும் ஒருங்கிணைந்த பாலமாக இது அமையும்.

நீடாமங்கலம் உழவர் சந்தை அருகிலிருந்து, வேளாண்மை அறிவியல் நிலையத்தின் அருகே மேம்பாலமாகச் செல்கின்ற இந்தப் பாலம் பிரிந்து, ஒருபாதை தஞ்சை சாலையையும், மற்றொரு பாதை மன்னார்குடி சாலையை அணுகும் விதமாகக் கட்டப்பட உள்ளது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பிளாட்பாரத்துக்கு இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கும்பகோணம், திருவாருர் செல்லும் சாலையில் வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட உள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீட்டை வரையறை செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டது. அதில், மண் ஆய்வுப் பணி கடந்த வாரம் தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான செலவில் 50 சதவீதத்தை ரயில்வே துறையும், 50 சதவீதத்தை தமிழக நெடுஞ்சாலைத் துறையும் ஏற்றுக்கொண்டுள்ளன. மக்கள் நலன்கருதி பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்திலேயே ரயில்வே பிளாட்பாரத்துக்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை செல்கின்ற ஊர் நீடாமங்கலம் மட்டும்தான். தஞ்சையிலிருந்து, நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலிருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்கின்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் இச்சாலை வழியாகத்தான் நடைபெறுகிறது.

இந்நிலையில், நீடாமங்கலத்தைக் கடந்து தினமும் 14 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள், 4 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. இதுதவிர, காரைக்கால் பகுதியிலிருந்து அதிகபட்சம் 12 சரக்கு ரயில்களும் இதன் வழியாகவே செல்கின்றன. இதற்காக, நீடாமங்கலத்தில் உள்ள ரயில்வே கேட் (எண்-20) தினமும் குறைந்தது 10 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்படுகிறது.

குறிப்பாக மன்னை, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக தினமும் 4 முறை காலை, மாலை இருவேளைகளிலும் தலா 30 நிமிடங்கள் ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும்போது இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

இதுதவிர, நீடாமங்கலம் ரயில் நிலையம் சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையமாக உள்ளது. இங்கு நெல் ஏற்றும்போதும், யூரியா உள்ளிட்டவற்றை இறக்கும்போதும் தேசிய நெடுஞ்சாலைக்கு வழிவிடுவதற்காக வேகன்கள் பிளாட்பாரத்துக்கு இடையில் பிரித்து நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு பிரிக்கும்போதும், வேலை முடிந்தவுடன் மீண்டும் வேகன்களை இணைக்கும்போதும் தொடர்ச்சியாக 1 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்படுகிறது.

ஒரு சரக்கு ரயிலின் வேகன்களை நிரப்ப 72 முதல் 87 லாரிகள் வரை வந்து செல்கின்றன. இந்த லாரிகளாலும் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியைக் கடக்க முடியாமல் பெரும் பாதிப்படைகின்றன. தஞ்சை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் இந்த ரயில்வே கேட் மூடப்படும்போது ஏற்படும் காலதாமதத்தால் உயிரிழக்கவும் நேரிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக உள்ள இந்த முக்கிய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x