Last Updated : 27 Nov, 2016 01:52 PM

 

Published : 27 Nov 2016 01:52 PM
Last Updated : 27 Nov 2016 01:52 PM

குடிநீர் பஞ்சத்தால் அவதி பண்டைய காலத்துக்கு திரும்பும் கடற்கரையோர கிராம மக்கள்

பண்டைய காலங்களில் கிராமங் களில் சரியான முறையில் குடிநீர் விநியோகம் கிடையாது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும்.

தொடர் மழைக் காலங்களில் சமைக்கவும், குடிக்கவும் சுத்தமான தண்ணீர் கிடைக்காது. ஆனாலும் மக்களுக்கு மழைநீரை சேமிப்பதில் ஆர்வம் உண்டு.

தேவையின் பொருட்டு வந்த ஆர்வம் அது. வீட்டுக்கு வெளியே பெரிய பள்ளம் தோண்டி அதில் மழை நீரை சேமித்து அதைப் பயன்படுத்தி வந்தனர்.

மழைக் காலங்களில் வீட்டுக்கு வெளியே பெரிய வெள்ளை துணி யின் நான்கு முனையிலும் குச்சியை நட்டு வைத்து கட்டிவிடுவார்கள். அதில் விழும் மழை நீர் ஒன்று சேர்ந்து நடுப்பகுதிக்கு வரும். அதனைப் பானைகளில் பிடித்து பல நாட்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் காலகட்டத்தில் பயன்படுத்திய வழிமுறையை தற்போது பயன்படுத்தும் நிலைக்கு சிதம்பரம் அருகே உள்ள கடற்கரை கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் கடற்கரைப் பகுதி உள்ளது இதனையொட்டி கிள்ளை, பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், சின்னக் காரமேடு, கீழச்சாவடி, மேலச்சாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியபோது இந்தப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்ததால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் அனைத் தும் உப்பு நீராக மாறியது.

பின்னர் குடிநீர் கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை அரசு இங்கு கொண்டு வந்தது.

ஆரம்பத்தில் வாரத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் வந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது.

தண்ணீர் வரும் குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடைகோடி கிராமங்களுக்கு மிகவும் குறைவான தண்ணீரே வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்துக்கு ஆளா கின்றனர்.

இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் வீட்டுக்கு வெளியே அந்த காலத்தில் பயன்படுத்தியதைப் போல பெரிய வெள்ளை துணியை கட்டி வைத்து அதன் கீழ் குடங்களை வைத்துள்ளனர். மழை பெய்யும் போது அந்த தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வரு கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குடி தண்ணீருக்காக அலைந்து திரிவதை விட மழை பெய்யும்போது துணியை கட்டி நீரை சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறோம்” என்றனர். பெரிய அளவிற்கு இப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும் கிடைக்கும் கொஞ்சம் மழை நீரை இப்படி குடிநீருக்காக சேகரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x