Published : 14 Sep 2022 06:14 AM
Last Updated : 14 Sep 2022 06:14 AM

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு சட்டரீதியான சலுகை வழங்கப்படுகிறதா? - தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு சட்டரீதியான சலுகைகள் வழங்கப்படுகிறதா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை வாடிப்பட்டி அருகேஉள்ள பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி, கொலை, மரணம், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, 3 மாதங்களுக்கான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

ஆனால், பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டோருக்கு சட்டரீதியான நிவாரண நிதி மற்றும் உதவிகள் வழங்கப்படவில்லை. எனவே,2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, விவசாய நிலம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதுபோல பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படாததால், அதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி செலவிடப்படாமல் திரும்ப அனுப்பப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், “மனுதாரரின் குற்றச்சாட்டு உண்மையா? வன்கொடுமை வழக்குகளுக்கான நிவாரணத்துக்காக மத்திய அரசு அளித்த நிதி எவ்வளவு? தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இதில் எத்தனை குடும்பங்களுக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து உள்துறைச் செயலர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x