Published : 09 Jun 2014 02:39 PM
Last Updated : 09 Jun 2014 02:39 PM

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.

கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் ஜெகதாப்பட்டிணத்திலிருந்து 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். சனிக்கிழமை இரவு மீனவர்கள் கச்சத் தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

இதில் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 82 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 18 விசைப்படகுளையும் கைப்பற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிமை மாலை மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரியும், மூன்றாம் கட்ட மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தியும் திங்கட்கிழமையிலிருந்து காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்த்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

திங்கட்கிழமையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் கரையோரங்களில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x