வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள பறவைகள் காட்சி அரங்கம் நவீனமாகுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள பறவைகள் காட்சி அரங்கம் நவீனமாகுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

மதுராந்தகம்: பறவைகளின் வாழ்வியல் விவரங்களுடன், நவீன தொழில்நுட்ப முறையில் வேடந்தாங்கல் சரணாலய கண்காட்சி அரங்கத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சீசன் தொடங்கும். அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

அப்போது பறவைகளை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள், மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். பறவைகளின் விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில், பறவைகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் வாழ்விட விவரங்கள், விரும்பும் உணவுகள் உள்ளிட்டவற்றை விளக்கும் கண்காட்சி அரங்கம் வனத்துறை சார்பில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, முழுமையான விவரங்களை அறியும் வகையில் இந்த கண்காட்சி அரங்கத்தை நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தி ஒலி, ஒளி காட்சிகளுடன் சரணாலயத்தின் வரலாறு மற்றும் பறவைகளின் விவரங்களை எளிதில் அறியும் வகையில் கண்காட்சி அரங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அழிந்து வரும் பறவைகள் உட்பட பல்வேறு பறவை இனங்களின் புகைப்படங்களை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காட்சிப்படுத்தலாம் என்றும் இதன்மூலம், பறவைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கண்காட்சி அரங்கத்தை நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின் ஒப்புதல் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in