Last Updated : 23 Oct, 2016 12:18 PM

 

Published : 23 Oct 2016 12:18 PM
Last Updated : 23 Oct 2016 12:18 PM

ஆமைகளைப் பாதுகாக்க 8 மாவட்ட கடற்பகுதியில் 5 கடல் மைல் தொலைவுக்கு மீன் பிடிக்க தடை: வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கருத்து

ஆமைகளைப் பாதுகாக்க 8 மாவட்ட கடற்பகுதிகளில் 5 கடல்மைல் தொலைவுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, முறையற்ற மீன் பிடித்தல் ஆகியவை கடல் ஆமை களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன.

8 மாவட்டங்களில்..

இதனைக் கருத்தில் கொண்டு, கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஆமை இனப்பெருக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 90 பகுதிகளில் ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை விசைப்படகுகள், வெளியே இயந்திரம் பொருத்தப்பட்ட நாட் டுப் படகுகள் உள்ளிட்டவை மூலம் கரையிலிருந்து 5 கடல் மைல் (9.26 கி.மீ.) தொலைவுக்கு, மீன் பிடிக்க தடை விதித்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் முதன்மை நிர்வாகி வின்சென்ட் ஜெயின் கூறுகையில், “மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 45 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இது போக தற்போது மேலும் 4 மாதங்கள் 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது. இது நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பு அனைத்து பகுதி மீனவ பிரதிநிதிகளுடன் அரசு கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

கடல் வள பாதுகாப்பு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால், அவ்வாறு கடல் வளத்தை பாதுகாக்க மீன்பிடி தடை மட்டுமே தீர்வாகாது. அதற்கு நிறைய மாற்று வழிகள் உள்ளன. அவற்றை அரசு கையாள வேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்த மீன்பிடி படகுகளில், பாதிக்கும் மேற்பட்டோர் வெளியே இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகை பயன்படுத்தித்தான் மீன் பிடிக்கின்றனர்.

எனவே, இவர் களுக்கு மீன்பிடி தடை காலத்தில் ஏதேனும் நிவாரணத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து அரசு ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வில்சன் கூறுகையில், “ஆமைகளை சாகடிக்க வேண்டும் என்ற எண்ணம் மீனவர்களுக்கு இல்லை. சில நேரங்களில் ஆமை கள் வலையில் சிக்கினாலும் அவற்றை நாங்கள் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுகிறோம்.

தற்போது மோட்டார் பொருத் தாத நாட்டுப் படகுகளே கிடையாது. இந்நிலையில், 5 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பது உண்மை

தான். ஆனால், ஆமைகளைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் மீனவர்களின் நலனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒட்டுமொத்தமாக மீன்பிடி தடைவிதிப்பதற்கு பதில், படிப்படியாக வேறு ஏதேனும் மாற்று வழிகளை அரசு அமல் படுத்த முன்வர வேண்டும்” என்றார்.

மாற்று வழி

மாணவர் கடல் ஆமை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் கூறும் போது, “உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் ஓர் உயிரினம் கடல் ஆமைகள். ஐனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இனப்பெருக்கம் செய்ய வரும் கடல் ஆமைகள், கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகம் கூடுகின்றன. சில நேரங்களில் மீன்களுடன் கடல் ஆமைகளும் வலையில் சிக்குகின்றன. இவற்றைத் தவிர்க்க மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் விடுவிக்கும் டிஇடி கருவியை (Turtle excluder device – TED) பெரிய படகுகளில் பயன்படுத்தலாம். டிஇடி என்பது சிறு இடைவெளிகளைக் கொண்ட இரும்புக் கம்பிகளால் ஆன கிரிட் ஆகும். இதனை வலைகளின் இடையில் பொருத்தலாம். அப்படி பொருத்தும்போது வலைக்குள் மீன்கள் வந்து சிக்குவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வலைக்குள் ஆமைகள் வந்தால், வலையில் பொருத்தப்பட்டுள்ள கிரிட் மூலம் தடுக்கப்பட்டு ஆமை கள் வெளியேற முயற்சிக்கும். அந்த நேரத்தில் கிரிட்டின் மேல் அல்லது கீழ் பகுதியில் திறந்து மூடும் வகையில் உள்ள வலை யின் சிறிய இடைவெளியை பயன்படுத்தி ஆமைகள் எளிதில் வெளியேறி தண்ணீருக்குள் சென்றுவிடும்.

எனவே, கடலா மைகளின் முக்கியத்துவம் குறித்தும், டிஇடி கருவி குறித்தும் மீனவர் களிடையே தமிழக அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x