Published : 05 Oct 2016 08:31 AM
Last Updated : 05 Oct 2016 08:31 AM
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என உச்ச நீதிமன் றத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. இதன்மூலம் கர்நாடகத் துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வரு கின்றன. இது தமிழக பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)
தற்போதுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றுதான் மத்திய அரசு கூறியுள்ளது. வாரியத்தை அமைக்கவே முடியாது என ஒருபோதும் கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்தான் சில கருத்துக்களை தெரிவித்துள் ளார். பிரமாண பத்திரம் எதையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என் பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் காவிரி பிரச்சினை பற்றி மவுனம் சாதிக்கின்றனர். இது பற்றி பேச மறுப்பவர்கள் பாஜகவை மட்டும் குறை கூறுவதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய இணை அமைச்சர்)
காவிரியில் தமிழகத்தின் உரிமைகளுக்காக தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தில் சிலர் எதற்கெடுத்தாலும் பாஜகவை குறை கூறுகின்றனர். காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் நிலையை உணர்த்த நாளை (அக். 5) பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோரை சந்திக்க இருக்கிறேன். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இல.கணேசன் (பாஜக மூத்த தலைவர்)
காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனடியாக அமைக்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் கூடி விவாதித்தோம். அதன் அடிப்படையில் மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனது கருத்தும் அதுதான்.
எச்.ராஜா (பாஜக தேசிய செயலாளர்)
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றுதான் மத்திய அரசு கூறியுள்ளது. வாரியம் அமைக்க மாட்டோம் என கூறவில்லை. எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரி யம் மற்றொரு செயலற்ற அமைப்பாக இருந்து விடக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பையே செயல்படுத்த கர்நாடகம் மறுத்து வருகிறது. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண இரு மாநில அரசுகளையும் கலந்தாலோசித்த பிறகே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இந்த யதார்த்த நிலையைத்தான் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லியுள்ளது. இதனை மறைத்துவிட்டு மத்திய அரசை குறைகூறுவது கண்டிக் கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவிரி பிரச்சினை குறித்து தமிழக பாஜக தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடு பட்டனர். காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாட்டால் தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் முறையிடுவது என அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதற்காக ஓரிரு நாளில் டெல்லி செல்ல இருப்பதாகவும் பாஜக தலைவர் ஒருவர் 'தி இந்து'விடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT