Published : 09 Sep 2022 06:36 AM
Last Updated : 09 Sep 2022 06:36 AM

தமிழக அரசு வேலைவாய்ப்பில் பிரத்யேகமாக 30% வழங்கியது தவறு; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கு இடஒதுக்கீடு: திருத்தம் கொண்டுவர உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசுப் பணிகளில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 சதவீதஇடஒதுக்கீடு வழங்கியது துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தகுந்த திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 சதவீத இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 சதவீதஇடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், நளினி சிதம்பரம், வழக்கறிஞர் தாட்சாயினி ரெட்டி:தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 சதவீதமும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 சதவீதம் ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 சதவீதத்திலேயே, பெண்களுக்கு 30 சதவீதஇடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனியாக வழங்க முடியாது. வேலைவாய்ப்பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு மெரிட்அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்டவிரோதம் என்பதால், 30 சதவீத ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழகஅரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது துரதிர்ஷ்டவசமானது, தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறைகளில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 சதவீத இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 சதவீதபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 சதவீதத்துக்குள்தான் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 சதவீத இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும்பவில்லை. இனிமேல்,இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்குகளை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x