Published : 01 Jun 2014 11:40 AM
Last Updated : 01 Jun 2014 11:40 AM

கரகாட்ட மோகனாம்பாளின் சகோதரி மகன் வீட்டுக்கு ‘சீல்’: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

கரகாட்ட பெண் மோகனாம்பாளின் சகோதரி மகன் சரவணன் வீட்டில் நடத்திய சோதனை யில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மர கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய இவரது வீட்டை ‘சீல்’ வைத்த போலீஸார், சரவண னின் மனைவியை கைது செய்தனர்.

காட்பாடி தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவைச் சேர்ந்த ஜமுனா என்பவ ரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் என்பவ ரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம், 73 பவுன் நகை, வீட்டு அடமான பத்திரங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மோகனாம்பாள்(50), சகோதரி நிர்மலா, இவரது மகனும் செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவருமான சரவணன் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க காட்பாடி காவல் நிலைய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வட்டித் தொழில் மட்டுமின்றி செம்மர கடத்தல் கும்பலுடனும் மோகனாம்பாளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. செம்மர கடத்தலில் கிடைத்த பணத்தை அந்த வீட்டில் பதுக்கி வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோகனாம்பாளின் வீட்டில் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்து, 7 நாட்கள் ஆகியும் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய முடியாத சம்பவம் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீஸார் தங்களது பிடியை இறுக்கி விசாரணை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சரவணனின் மனைவி தேவிபாலா மற்றும் உறவினர்களிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தேவிபாலாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தனது கணவருக்கு செம்மர கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்புகள் குறித்து உறுதி செய்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில், கஸ்பா இந்திரா நகரில் உள்ள சரவணன் வீட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு திடீரென சோதனை நடத்தினர். வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியுடன் நடத்திய சோதனையில், அங்குள்ள ஒரு அறையில் 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை செம்மரங்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் மலை கிராம இளைஞர்கள் பயன்படுத்துவது என தெரியவந்தது.

ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வீட்டுக்கு போலீஸார் ‘சீல்’ வைத்தனர். மேலும், கணவரின் சட்ட விரோத செயல்களை தெரிந்திருந்தும் அதனை மறைத்த குற்றத்துக்காக தேவிபாலாவை போலீஸார் கைது செய்தனர். விரைவில் சரவணன், மோகனாம்பாளை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x