பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.

பணி நேரத்தில் அலுவலகத்தில் புகைப்பிடித்த பிடிஓ: பணி இடைநீக்கம் செய்த மதுரை ஆட்சியர்

Published on

மதுரை: பணி நேரத்தில் அலுவலகத்தில் புகைபிடித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிட நீக்கம் செய்து மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக என்.சவுந்தர்ராஜன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. பணி நேரத்தின்போது இவர் புகைப்பிடித்ததை ஊழியர்கள் புகைப்பட ஆதாரத்துடன் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

அதனால், தமிழ்நாடு உள்ளாட்சிப்பணிகள் ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிகள் 1973 இன் விதி 20(1)-ஐ மீறிய ஒழுங்கீன நடவடிக்கையின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தர் ராஜனை மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட கவுந்தரராஜன் முன் அனுமதி இன்றி மாவட்டத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in