Published : 06 Sep 2022 06:20 AM
Last Updated : 06 Sep 2022 06:20 AM

ராகுல் காந்தி நடைபயணத்துக்காக குமரியை வந்தடைந்த 50 கேரவன்கள்

ராகுல் காந்தி நடைபயணத்தின்போது குழுவினர் தங்குவதற்காக கன்னியா குமரியை நேற்று வந்தடைந்த கேரவன்கள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி எம்.பி. நாளை தொடங்கும் நடைபயணத்துக்காக 50-க்கும் மேற்பட்ட கேரவன்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை பயணம் என்ற நடைபயணத்தை நாளை (7-ம் தேதி) மாலை தொடங்குகிறார். இதில், தேசிய அளவில் காங்கிரஸ் நிர்வாகிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமும் 7 மணி நேரம், 15 முதல் 20 கிமீ வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள், கேரளாவில் 7 மாவட்டங்களில் 19 நாட்கள் 400 கிமீ தூரம் நடைபயணம் செல்கிறார். தெலங்கானாவில் 15 நாட்களில் 300 கிமீ தூரம், கர்நாடகாவில் 21 நாட்களில் 500 கிமீ தூரம், மகாராஷ்டிராவில் 16 நாட்களில் 350 கிமீ தூரம் நடைபயணம் செல்கிறார்.

தொடர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக 150 நாட்களில் காஷ்மீர் செல்கிறார். இந்த நடைபயணம் மூலம் 150 நாட்களில் 1 கோடி மக்களை ராகுல் காந்தி சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி, டெல்லி மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் வல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.

ராகுல் காந்தி மற்றும் அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் தலைவர்கள் ஓய்வெடுக்க வசதியாக, படுக்கை வசதி, கழிப்பறை, குளியலறைகள் உட்பட நவீன வசதிகளுடன் கூடிய 50-க்கும் மேற்பட்ட கேரவன்கள் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தன. நடைபயணத்தின்போது கேரவன்களும் செல்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x