Last Updated : 30 Aug, 2022 04:10 PM

 

Published : 30 Aug 2022 04:10 PM
Last Updated : 30 Aug 2022 04:10 PM

புதுச்சேரி | அரசுத் துறைகளில் உள்ள 10,501 காலிப் பணியிடங்கள்; 3 மாதங்களில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவை | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுத் துறைகளில் 10,501 காலிபணியிடங்கள் உள்ளன. மூன்று மாதங்களில் காவல்துறை காலி பணியிடங்களும், இரு மாதங்களில் எல்டிசி, யூடிசி பணியிடங்களும் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

அனிபால்கென்னடி(திமுக): அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை? இதனை ஏன் நிரப்பவில்லை?

முதல்வர் ரங்கசாமி: அரசின் மொத்தம் உள்ள 56 துறைகளில் ஏ, பி, சி பிரிவுகளில் 10 ஆயிரத்து 501 காலி பணியிடங்கள் உள்ளன. முதல்கட்டமாக ஆயிரத்து 200 முதல் 2 ஆயிரம் பேரை பணிக்கு எடுக்க உள்ளோம். படிப்படியாக முழுமையாக நிரப்ப திட்டமிட்டுள்ளோம்.

நாஜிம்(திமுக): பலமுறை இப்படி சொல்கிறீர்கள். ஒரு காலக்கெடு வையுங்கள். இதற்கான நியமன விதிகளை ஏற்படுத்துங்கள்.

ரங்கசாமி: இன்னும் 2 மாதங்களில் எல்டிசி, யூடிசி, அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்பப்படும். 3 மாதங்களில் காவல்துறை காலிபணியிடங்கள் நிரப்பப்படும். அதைத்தொடர்ந்து துணை தாசில்தார், விஏஓ, விஏ பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் விஏ பணிக்கு 2 ஆண்டு வயது வரம்பு தளர்த்தியுள்ளோம். பதவி உயர்வும் தரப்பட உள்ளது.

சம்பத்(திமுக): பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நிரப்ப வேண்டும்.

ரங்கசாமி: பணியின்போது இறந்த வாரிசுகளுக்கும் பணி வழங்கப்படும். மொத்தம் 120 பேர் உள்ளனர். ஒரே சமயத்தில் இவர்களை பல்நோக்கு ஊழியர் பணியில் நியமிக்க உள்ளோம்.

நேரு(சுயேச்சை): ஊர்க்காவல்படை, ஐஆர்பிஎன் உள்ளிட்டோருக்கு காவல்துறை பணியிடங்களில் முன்னுரிமை தர வேண்டும்.

ரங்கசாமி: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். விரைவில் படிப்படியாக பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு விவாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x