Published : 30 Aug 2022 11:26 AM
Last Updated : 30 Aug 2022 11:26 AM

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் மீண்டும் விநாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி என்ற நிலைக்கு உயர்ந்தது. ஆனால், நேற்று (29-ம் தேதி) மாலை நிலவரப்படி தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்நிலையில், இன்று (30-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அளவு மேலும் உயரக்கூடும் என மத்திய நீர் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, காலை 9 மணி நிலவரப்படி விநாடிக்கு சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x