செங்கல்பட்டு | 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் செங்கை அருகே கண்டுபிடிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வல்லம் கிராமத்தில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை ௭ழுந்துள்ளது.
கற்குவைகள் என்பவை பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள் ஆகும். அன்றைய காலத்து மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தை அடையாளம் காண்பதற்காக, பல குறியீடுகளை அமைத்திருந்தனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு அருகே வல்லம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில், ஏராளமான குன்றுகள் உள்ளன. இந்த குன்றுகளில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சுமார், 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பெருங்கற்கால அடையாளங்களாக உள்ளன. இவ்வூரில், தொல்லியல் துறை முறையாக அகழாய்வு மேற்கொண்டால், இப்பகுதியின் தொன்மை மற்றும் ஏராளமான புதிய தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவரும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழர் தொன்மை வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வெற்றித்தமிழன் கூறியதாவது: பெருங்கற்கால நினைவுச் சின்னம் என்பது இன்றும் நம் மக்கள் வழக்காடுகளில் காரியம், கல்லெடுப்பு என்று கூறுவதுண்டு.
இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். இவை அமைக்கப்படும் முறையை வைத்து கற்குவை, கற்படை வட்டம், கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல் என பலவகைகளில் பெயரிடப்படுகின்றன.
இறந்தவர்கள் நினைவாக அல்லது ஈமச்சடங்குகளுக்கான கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட சின்னங்கள் இவற்றுள் அடங்கும். மேலும், தாழியிலிட்டு புதைக்கும் சின்னங்களையும் பெருங்கல் சின்னங்களாக கருதப்படுகின்றன. இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட இவ்வகையான ஈமச்சின்னங்கள் குறித்து சங்க இலக்கியங்களில் தகவல்கள் உள்ளன.
பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் நடுநிலை நாடுகள் ௭ன இன்னும் பல இடங்களில் இவை காணப்படுகின்றன. அங்கெல்லாம் சின்னங்களை பாதுகாத்து ஆய்வு செய்கின்றனர்.
இப்படியான புராதன சின்னங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன. ௮வற்றுள் குறிப்பிடத்தக்க வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காணப்படும் பெருங்கற்கால சின்னங்கள், மிகவும் தொன்மையானது.
அப்படியான நினைவுச் சின்னங்கள் தமிழகத்தில் மலைக்குன்று பகுதிகளில் பரவிக் கிடக்கின்றன. நம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இப்பகுதிகளை பாதுகாக்க ஆய்வுகள் நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைத்து தெரிவிக்க வேண்டும்.
பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய இந்த ஈமக்காட்டினை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்யும்போது, இங்கு மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
