Published : 15 Oct 2016 09:07 AM
Last Updated : 15 Oct 2016 09:07 AM

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி: கோவையில் வங்கி ஊழியர்கள் 2 பேர் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல்களை பரப்பியதாக, கோவையில் வங்கி ஊழியர்கள் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முதல்வரின் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. வதந்தி பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி 12-வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் புனிதாதேவி. இவர், தொண்டாமுத்தூரில் உள்ள வங்கிக்கு கடந்த 7-ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது, வங்கியில் பணிபுரியும் கிளார்க் ரமேஷ்(48), தங்க நகை மதிப்பீட்டாளர் சுரேஷ்(51) ஆகிய இருவரும், முதல்வரின் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல் தெரிவித்ததாக கட்சியினருக்கு புனிதாதேவி தகவல் அளித்துள்ளார்.

தொடர் விடுமுறையை அடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் வங்கிக்குச் சென்றுள்ளார் புனிதா தேவி. அப்போது, தகராறு எழுந்ததாகத் தெரிகிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து எதிர்மறை தகவல் பரப்பியதாக புனிதாதேவி அளித்த புகாரின்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, வங்கி ஊழியர்கள் இருவரையும் தொண்டாமுத்தூர் போலீஸார் கைது செய்தனர். இவர்கள், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x