Published : 22 Aug 2022 12:22 PM
Last Updated : 22 Aug 2022 12:22 PM

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிகள் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்து இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த புதிய விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ஆகம விதிகளைக் கடைபிடிக்காமல் தமிழக அரசு கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார்களை நியமிக்க உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதையடுத்து, இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அர்ச்சகர்களின் பணி நியமனம், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கடந்த 2021 அக்டோபரில் இடைக்கால உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் "கோயில்களில் இன்னும் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலமாக அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது. அறங்காவலர்களுக்கு மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க அதிகாரம் உள்ளது" என்று வாதிடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என ஆகம விதிகள் உள்ள நிலையில், அதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு அறநிலையத் துறை தரப்பில், "கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களின் காலி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், ஆகம விதிகள் பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கோயில் செயல் அலுவலர்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, வழக்கின் தீர்ப்புதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "தமிழக கோயில்களில், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசின் விதிகள் செல்லும். கோயில்களைப் பொறுத்தவரை, ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள், ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்களை கண்டறிவதற்கு 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x