Published : 23 Oct 2016 10:34 AM
Last Updated : 23 Oct 2016 10:34 AM

தோல்வியடைந்தால் தொண்டர்கள் சோர்வடைவர்: 3 தொகுதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் - மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மதிமுகவின் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், 3 தொகுதி தேர்தலில் போட்டியிடுவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மதிமுகவினருடன் வைகோ ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக மதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர் கூறுகையில், ‘மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல்களில் அதிகார பலமும், பண பலமும்தான் கை கொடுக்கும். பொதுத்தேர்தலி லேயே வெல்ல முடியாத சூழலில் இடைத்தேர்தலில் நின்று மீண்டும் தோல்வியடைந்தால், தொண்டர் கள் சோர்வடைவர். எனவே, ம.ந.கூட்டணியில் உள்ள விசிக கூறியபடி தேர்தலை புறக்கணிப்பதே சரியாகும் என்று பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள் கூறினர். ஆனால், சிலர் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் நீண்ட நேரம் ஆலோசித்தும் முடிவேதும் எடுக்கப்படவில்லை’ என்றார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், காவிரி மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை, கர்நாடகாவுக்கு சாதகமாக இருந்ததால் அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x