Published : 15 Aug 2022 06:46 AM
Last Updated : 15 Aug 2022 06:46 AM

மதுரை | அமைச்சருடன் சரவணன் திடீர் சந்திப்பு ஏன்?

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சரவணன்.

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்துக்குப் பிறகு, நிதி அமைச்சருக்கும், திமுவினருக்கும் எதிரான மனநிலையில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன், நள்ளிரவில் திடீரென பழனிவேல் தியாகராஜனை சந்தித்தார்.

அவரது இந்த சந்திப்பு திமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் சரணவன், திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த தொகுதியில் ‘சீட்’ கிடைக்காததாலே அவர் தேர்தல் நேரத்தில் பாஜகவில் சேர்ந்தார். மறுநாளே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும் உடனடியாக மதுரை மாநகரத் தலைவராக சரவணனை தமிழக பாஜக தலைமை நியமித்தது. அதன் பிறகு அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானார்.

கட்சிப் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பணம் செலவு செய்து பெருமளவு கூட்டத்தை திரட்டினார். கட்சியிலும் அதிகளவு உறுப்பினர்களை சேர்த்து திமுக, அதிமுகவுக்கு மதுரை மாநகரத்தில் கடும் போட்டியாக இருந்து வந்தார். பாஜகவில் நல்ல பதவியில் கவுரவமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் சரவணன், திடீரென்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசுவதற்கான நெருக்கடி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மதுரை மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சரவணனை பொறுத்தவரை அவர் இருக்கும் கட்சிக்கு செலவு செய்யத் தயங்காதவர். ஆனால், அவர் சொன்னதை கட்சி மேலிடம் கேட்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர். அப்படித்தான் ‘சீட்’ கிடைக்கவில்லை என்ற ஒற்றை காரணத்துக்காக சுயநலமாக பாஜகவில் சேர்ந்தார்.

அப்போதே நாங்கள் அவர் ஏற்கெனவே திமுக, அதன் பிறகு பாஜக, பிறகு மதிமுக, மீண்டும் திமுக எனப் பல கட்சிகளில் இருந்து வந்தவர் என்று எச்சரித்தோம். ஆனால், கட்சித் தலைமை அதையும் மீறி எம்எல்ஏ ‘சீட்’டும், மாநகரத் தலைவர் பொறுப்பும் வழங்கியது.

இந்த சூழலில் சரவணன் சிபாரிசு இல்லாமல் கட்சித் தலைமை சிலரை மாநகரப் பொறுப்புகளில் அண்மையில் நியமித்தது அவருக்கு கசப்பை ஏற்படுத்தியது. மேலும் சரவணன் தொழில்ரீதியாக சில வழக்குகளை சந்தித்து வருகிறார். அந்த வழக்குகளில் தனக்கு திமுகவினால் நெருக்கடி வருமோ என்ற அச்சத்திலும் இருந்தார்.

அதனால், அவர் திமுக பக்கம் ஏற்கெனவே தாவுவதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூலமே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த சூழலில் டாக்டர் சரவணனே எதிர்பாராத சூழலில் பாஜகவினர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசினர். அதனால்தான் திமுக பக்கம் போவதில் சிக்கல் ஏற்படுமோ என்று எண்ணினார்.

விமான நிலையச் சம்பவத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அரசியல் ரீதியாக சில நெருக்கடி ஏற்பட்டது. அதனால், அவர் திட்டமிட்டவாறு சரவணனை திமுக பக்கம் இழுப்பதற்கு முன், அவரையே தன்னை சந்திக்க வைத்து வருத்தம் கேட்கும் நிகழ்வை நடத்தினார். பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் டாக்டர் சரவணனை திமுக மேலிடம் கட்சியில் சேர்க்குமா என்பது தெரியவில்லை என்றனர்.

இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து சரவணனை நேற்று காலை நீக்கினார்.

சரவணன் ஏற்கெனவே திமுகவில் இருந்ததால் அவர் மீது அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். அவர் கட்சியில் மீண்டும் சேருவதை திமுகவினரே விரும்பவில்லை. ஆனால் பாஜகவினரோ அவர் வெளியேறியதை போஸ்டர் ஒட்டி கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x