Published : 11 Aug 2022 05:55 PM
Last Updated : 11 Aug 2022 05:55 PM

‘ஜெய்பீம்’ பட விவகாரம்: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீதான வழக்கு ரத்து

சென்னை: ‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டம், மகாலட்சுமி, மற்றும் வன்னியர்களின் தலைவர்களில் ஒருவரான குருவின் பெயரை இழிவுபடுத்தியும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், "இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளது. வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை" என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x