Published : 10 Aug 2022 07:46 AM
Last Updated : 10 Aug 2022 07:46 AM

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சியாக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்: அண்ணாமலை

திருக்கழுகுன்றம்: முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

திருக்கழுகுன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை, கே.அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:

தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆன்மிக ஆட்சி வேண்டும். ஆன்மிகம் என்பது கோயிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது மக்களுக்கான சிந்தனை. சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது.

அதைவிட மிக முக்கியமானது இருப்பவன், தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது.

ஆசை, காமம், குரோதம், பகை போன்ற எதுவும் இல்லாமல் சமநிலையில் அரசியல் செய்யக்கூடிய ஒரு மனிதர் வரும்போது ராமராஜ்ஜியம் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். ஏனென்றால் சமுதாய மாற்றம் வரும்போது, சந்ததியினரிடையே மாற்றம் ஏற்படும். நானும் முற்றும் துறந்த மனிதனாக முயற்சி எடுத்து, அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x