Published : 08 Aug 2022 07:27 PM
Last Updated : 08 Aug 2022 07:27 PM

மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 - ரூ.698 கோடி ஒதுக்கியது தமிழக அரசு 

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

இதன்படி மாணவிகள் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று கடந்த ஜூன் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரும் மாதமும் 7-ம் தேதி ரூ.1000 செலுத்தப்படும் என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, சமூக நலத் துறை ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x